சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கியது. அன்று 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 4 நாட்கள் விவாதம் நடந்து முடிந்ததை தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கை விவாதங்கள் குறித்து ஆய்வு நடத்த, பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வை மார்ச் 9-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ந் தேதி வரை 23 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தமிழக சட்டசப்பேரவை இன்று மீண்டும் கூடியது. சட்டசபை கூடியதும், எம்எல்ஏக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் க.அன்பழகன், எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன், முன்னாள் எம்எல்ஏ சங்கரன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் இரங்கல் குறிப்பு வாசித்தார். இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், சட்டசபை புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சட்டசபையில் விவாதிக்கக்கோரி திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.