நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் முடிவடைந்தது.
அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் உள்பட 18 பேர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன. தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஒட்டப்பிடாரம் தேர்தல் பணிக்கு குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் துணை ராணுவத்தினர் நேற்று மாலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வந்தனர். அவர்கள் உதவி கமாண்டிங் அலுவலர்கள் ஹரிந்தசிங், சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் வந்துள்ளனர். மொத்தம் 277 துணை ராணுவ வீரர்கள் வந்து இருந்தனர்.
அவர்கள் கூறும்போது, “குஜராத்தில் தேர்தல் பணிகள் முடித்து விட்டு சிறப்பு ரெயில் மூலம் கோவா வழியாக நெல்லை வந்து இருக்கிறோம். நாங்கள் தூத்துக்குடி, வல்லநாடு, பசுவந்தனை ஆகிய இடங்களில் முகாம் அமைத்து தங்குவோம். அங்கு இருந்து தேர்தல் பணிக்கு செல்வோம்” என்றனர்.
பின்னர் துணை ராணுவ வீரர்கள் வேன் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு சென்றனர். #TNByPolls