வானிலை நிலவரம் 
செய்திகள்

2 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- வானிலை மையம் எச்சரிக்கை

மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசலாம் என்பதால் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள், 2 நாட்களுக்கு கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று அளித்த பேட்டி வருமாறு:-

தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இடைவெளி விட்டு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடல், குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசலாம். எனவே, தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள், 2 நாட்களுக்கு கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 செமீ மழை பெய்துள்ளது. தாம்பரத்தில் 5 செமீ, வால்பாறை, சின்ன கல்லார், சென்னை டிஜிபி அலுவலகம் ஆகிய பகுதிகளில் தலா 4 செமீ மழையும், பள்ளிப்பட்டில் 3 செமீ மழையும் பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.