கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம், ஆரம்பாக் தொகுதி பெண் எம்.பி. அபருபா பொத்தார். இவர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவரது கணவர் முகமது ஷகீர் அலி. இந்த தம்பதியருக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்த நிலையில், அபருபா மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
நிறைமாத கர்ப்பிணியான அவரை பிரசவத்துக்காக ஸ்ரீராம்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு செல்லமாக கொரோனா என பெயர் சூட்டி உள்ளனர்.
இதுபற்றி அபருபாவின் கணவரும், ரிஷ்ரா நகராட்சி கவுன்சிலருமான முகமது ஷகீர் அலி கூறுகையில், “நாங்கள் எங்கள் மகளுக்கு கொரோனா என்ற செல்ல பெயரை கொடுத்துள்ளோம். இப்போது நாம் சந்தித்து வருகிற கொரோனாவின் கடினமான நிலைமை ஒரு நாள் சிறப்பாக மாறும். ஆனால் எங்கள் மகள் பெயர் உலகம் முழுவதும் எதிர்கொண்ட கடினமான காலங்களை மக்களுக்கு தொடர்ந்து நினைவுபடுத்தும்” என குறிப்பிட்டார்.
தனது மனைவி மற்றும் புதிய மகள் உடல்நலம் குறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி விசாரித்து அறிந்ததாகவும் அவர் கூறினார்.