புதுச்சேரி:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே. ரங்கராஜன் இன்று புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மத்தியில் பாரதிய ஜனதா அரசு இருக்கும் வரை விலைவாசி குறையவே குறையாது. நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து கொண்டு தான் இருக்கும்.
கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல்- டீசல் விலை நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டே வருகிறது. டீசல் விலை உயரும் போது சோப்பு, சீப்பு, கண்ணாடி என அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும்.
இதனால்தான் பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க கோரி போராட்டம் நடத்தி வருகிறோம். விலைவாசி உயர்வை எதிர்த்து எங்களது போராட்டம் தொடரும்.
புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு பெட்ரோல்- டீசலுக்கான மாநில வரியை குறைக்க முன்வர வேண்டும். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மாற்றப்பட வேண்டிய அரசு.
புதுவை கவர்னர் கிரண்பேடியின் அணுகுமுறை முதிர்ச்சியற்றதாக உள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தை படிக்காமலேயே ஏதோ கவர்னர் கருத்து கூறி உள்ளார். சுகாதாரத்தையும், உணவையும் இணைத்து பேசுவது முறையற்றது. கிரண்பேடி கவர்னராக இருப்பது புதுவை- தமிழகம் மட்டுமல்லாது நாட்டுக்கே அவமானம்.
இவ்வாறு அவர் கூறினார். #PuducherryGovernor #KiranBedi