செய்திகள்

வடக்கு ஒடிசா- மேற்குவங்காளத்தை டிட்லி புயல் மீண்டும் தாக்கியது

ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை தாக்கிய டிட்லி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மீண்டும் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை தாக்கியது. #TitliCyclone

மாலை மலர்

வங்க கடலில் அந்தமான் அருகே உருவான டிட்லி புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை நோக்கி நகர்ந்து வந்தது.

நேற்று அதிகாலை வடக்கு ஆந்திராவில் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களையும் தெற்கு ஒடிசாவின் கஜபதி மற்றும் கஞ்சம் மாவட்டங்களையும் பலமாக தாக்கியது. அப்போது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பயங்கர காற்று வீசியது. காற்றும் மழையும் 4 மாவட்டங்களையும் துவம்சம் செய்தது.

அதன்பிறகு அதி தீவிர புயலாக இருந்த டிட்லி புயல், தீவிர புயலாக மாறி தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி சுழன்று நகர்கிறது.

நேற்று இரவு வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கேங்டிக் பகுதியை டிட்லி புயல் தாக்கியது. தற்போது வடக்கு ஒடிசாவின் பவானி பாட்னா நகரில் இருந்து கிழக்கு வடகிழக்கில் 50 கி.மீ தொலைவிலும், புல்பானி நகருக்கு மேற்கு தென்மேற்கே 80 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.