திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மார்க்கெட் அருகே கன்னிக்கோவில் தெருவில் உள்ள ஒரு கடைக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சரக்கு லாரியில் வருவதாக நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின்பேரில் கன்னிக்கோவில் பகுதியில் நேற்று காலை சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட், வினோத் மற்றும் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நகராட்சி அலுவலர்கள் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் லாரியில் இருந்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.