செய்திகள்

திருவாடானை பகுதியில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: கருணாஸ் எம்.எல்.ஏ உறுதி

திருவாடானை பகுதியில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

திருவாடானை:

திருவாடானை தாலுகாவில் கடும் வறட்சி நிலவியதை தொடர்ந்து விவசாயம் பொய்த்துப் போனது.

இந்த நிலையில் விவசாயிகள் அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் விவசாய அலுவலகங்களில் பயிர் காப்பீடு செய்திருந்த நிலையில் தற்போது திருவாடானை தாலுகாவில் குளறுபடிகள் காரணமாக ஒரு சில பகுதியில் ஏக்கருக்கு 17500 ரூபாயும் ஒரு சில பகுதியில் 5500 ரூபாயும் வழங்கப்பட்டு உள்ளது.

மங்கலக்குடி பிர்காவில் முற்றிலும் பயிர் காப்பீடு தொகை வழங்கப்பட வில்லை இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நெய்வயல், ஓரிக்கோட்டை, மங்கலக்குடி, ஆண்டாவூரணி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் இப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் விவசாயிகளை சந்தித்து இந்த வருடம் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு கண்டிப்பாக தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதற்கு காலஅவகாசம் ஆகும் என்று தெரிவித்தார்.

விவசாயிகளை சந்திக்க வரும்போது கருணாசின் பாதுகாப்பிற்கு வந்த திருவாடானை காவல் துறை வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதி சிறு விபத்து ஏற்பட்டது. இதில் திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலைய வாகனத்தின் பின்புற கண்ணாடி உடைந்து சிதறியது.