திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டபோது எடுத்த படம். 
செய்திகள்

அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ்திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிற்றுண்டி

இந்த அன்னதான திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 500 பக்தர்கள் பசியாறுகின்றனர். இதனை தொடர்ந்து மற்ற கோவில்களிலும் ஒரிரு நாட்களில் பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும்.

மாலை மலர்

சென்னை :

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 16-ந்தேதியன்று திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய மூன்று கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தினால் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த அன்னதானம் வழங்கும் திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி இன்று (நேற்று) முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ் காலை 8 மணி முதல் 10.30 வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும்.

மற்ற வேளையில் உணவு வழங்கப்படும். இந்த அன்னதான திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 500 பக்தர்கள் பசியாறுகின்றனர். இதனை தொடர்ந்து மற்ற கோவில்களிலும் ஒரிரு நாட்களில் பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும்.

மேற்கண்ட தகவல் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.