திருப்பூர்:
திருப்பூர் பி.என்.ரோடு டீச்சர் காலனியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 25). பனியன் தொழிலாளி. சம்பவத்தன்று இரவு வேலை முடித்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
கல்லாங்காடு என்ற இடத்தில் வந்தபோது 2 வாலிபர்கள் சாமிநாதனை வழிமறித்தனர்.
அப்போது நாங்கள் போலீஸ் என்றும் உங்கள் மீது சந்தேகம் உள்ளது என்று கூறி மோட்டார் சைக்கிள் மற்றும் அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரத்தை வாங்கிவிட்டு நாளை காலை வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் உங்களது தான் என்று ஆவணங்களை கொடுத்து விட்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றனர்.
இதை நம்பிய சாமிநாதன் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை மோட்டார் சைக்கிளை எடுத்து வர வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். போலீசாரிடம் கேட்டபோது நாங்கள் யாரும் மோட்டார் சைக்கிளை வாங்கி வரவில்லை என்று கூறினர்.
இதனையடுத்து அதே போலீஸ் நிலையத்தில் சாமிநாதன் புகார் செய்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். இதனையடுத்து வீரபாண்டியை சேர்ந்த சுபாசந்திரபோஸ் (22), வெள்ளியங்காட்டை சேர்ந்த சுதர்சன் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.