முக கவசம் 
செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளியே வருபவர்களுக்கு முக கவசம் கட்டாயம்- கலெக்டர் எச்சரிக்கை

வெளியில் செல்லும் பொதுமக்கள் முகக் கவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிவன்அருள் எச்சரித்துள்ளார்.

மாலை மலர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் அத்தியாவசியத் தேவைக்கு வெளியில் செல்லும் பொதுமக்கள் முகக் கவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிவன்அருள் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் வெளியில் நடமாடாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்நிலையில், அத்தியாவசியத் தேவைக்கு வெளியில் செல்லும் பொதுமக்கள் முகக் கவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.

வெளியில் சென்று வந்தால் உடனடியாக குளிக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புவது தடை செய்யப்படுகிறது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் செல்லிடப்பேசியில்’ஆரோக்கிய சேது’ கொரோனா நோய்த் தொற்று விழிப்புணர்வு செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு, தற்போதைய நிலவரம் மற்றும் நோய்த் தடுப்பு தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.