செய்திகள்

திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி கார், வேன், ஜீப்புகளுக்கு கட்டணம் நிர்ணயம்

திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி கார், வேன், ஜீப்புகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் கட்டணம் வசூல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் கூறினார்.

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) நடக்கிறது. அதையொட்டி அரசு சார்பில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அத்துடன் திருப்பதியில் இருந்து திருமலைக்கும், திருமலையில் இருந்து திருப்பதிக்கும் கார்கள், வேன்கள், ஜீப்புகள் ஆகியவை இயங்கும். அதில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க கார்கள், வேன்கள், ஜீப்புகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள், டிரைவர்கள் ஆகியோரை வரவழைத்து திருப்பதியில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் திருப்பதி வட்டார போக்குவரத்து அலுவலர் விவேகானந்தரெட்டி கலந்து கொண்டு பேசுகையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேரத்தில் கார், வேன், ஜீப் டிரைவர்கள் பக்தர்களிடம் இருந்து கூடுதல் கட்டணத்தை வசூல் செய்யக்கூடாது. தனியார் வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படக்கூடாது. மேற்கண்ட தனியார் வாகனங்களில் பெரியவர்களுக்கு ரூ.60-ம், சிறியவர்களுக்கு ரூ.30-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் கட்டணம் வசூல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக அதிகாரிகள் முரளி, சுரேஷ், சிவாரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT