செய்திகள்

திருநாவலூர் அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாலை மலர்

திருநாவலூர்:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே உள்ள ஆத்தூர் ஊராட்சிக்குப்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக சீராக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இன்று காலை அப்பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் உளுந்தூர்பேட்டை- திருவெண்ணைநல்லூர் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் காலிகுடங்களுடன் பங்கேற்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் ஆதலிங்க கோஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

விரைவில் ஆத்தூர் ஊராட்சிக்குப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். அதன்பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். #Tamilnews