திருச்சி:
திருச்சி சாலைரோட்டில் கோட்டை ரெயில் நிலையம் அருகில் மிக பழமையான மேம்பாலம் உள்ளது. மாரீஸ் மேம்பாலம் என அழைக்கப்படும் இந்த பாலத்தில் கடந்த மாதம் பெய்த மழையினால் கைப்பிடி சுவர் உள்பட ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனை தொடர்ந்து அந்த பாலம் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டது. அதன்பின்னர் மாநகராட்சி சார்பில் தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அந்த பாலம் வழியாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இந்நிலையில் தற்போது மீண்டும் பாலத்தின் ஒருபகுதி அடைக்கப்பட்டு கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நேற்று மாலை நடைபெற்றது.