வீடு புகுந்து திருடியதாக கைதான 2 பெண்களையும், அவர்களை மடக்கி பிடித்த போலீசாரையும் படத்தில் காணலாம் 
செய்திகள்

திண்டிவனம் பகுதியில் கடன் வாங்கி தருவதாக கூறி வீடுகளில் திருடிய 2 பெண்கள் கைது

திண்டிவனம் பகுதியில் கடன் வாங்கி தருவதாக கூறி வீடுகளில் திருடிய 2 பெண்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 35 பவுன் நகை பறிமுதல் செய்தனர்.

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நொளம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். விவசாயி. இவர் வழக்கம் போல் வயலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது குமார் வீட்டில் இருந்து ஒரு பெண் திடீரென வெளியேறினார். அதிர்ச்சிஅடைந்த அவர் பொதுமக்கள் உதவியுடன் அந்த பெண்ணை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தார்.

அதன்பின்னர் அந்த பெண் ஒலக்கூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அந்தப்பெண் செங்கல்பட்டு மாவட்டம் மேற்குசெய்யூர் குளக்கரை தெருவை சேர்ந்த பாலு மனைவி கல்பனா என தெரியவந்தது.

மேலும் ஒரு பெண் தன்னுடன் வந்ததை அவர் ஒப்புக்கொண்டார். தப்பியோடிய பெண் சென்னை பெருங்களத்தூர் முத்தலாண்டி தெருவைச் சேர்ந்த செல்வம் மனைவி லட்சுமி என தெரிய வந்தது. 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 2 பேரும் வீடு வீடாக சென்று முதலில் கடன் வாங்கி தருவதாக கூறி நோட்டமிட்டு உள்ளனர். அதோடு மின் வாரியத்தில் இருந்து வந்து உள்ளோம். மின் அளவீடு செய்ய வேண்டும் என்று கூறி வீடுகளில் யார்- யார்? உள்ளார்கள் என்று பார்த்து உள்ளனர். அதன்பின்னர் 2 பேரும் வீடுகளில் திருடி உள்ளனர்.

இவர்களிடம் இருந்து 7 லட்சம் மதிப்புள்ள 35 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். ஏற்கனவே இவர்கள் மீது திண்டிவனம், பிரம்மதேசம், மயிலம், மரக்காணம், ஆகிய போலீஸ் நிலையங்களில் இவர்கள் மீது 33 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது.

இந்த வழக்கில் விசாரணை நடத்தி நகைகளை மீட்ட காவல்துறை அதிகாரிகளை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் பாராட்டினார்.

SCROLL FOR NEXT