பனாஜி:
கோவா மாநிலத்தில் வனவிலங்குகள் சரணாலய பகுதிகளில் உள்ள புலிகள், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளை தாக்கி அவற்றை சாப்பிடுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
இதனால் சில சமயம், பொதுமக்கள் ஆத்திரமடைந்து புலிகளை அடித்துக் கொல்கின்றனர். கடந்த மாதம் மகதாயி வனவிலங்குகள் சரணாலயத்தில் ஒரு பெண் புலி மற்றும் அதன் மூன்று குட்டிகளை அப்பகுதி மக்கள் கொன்றுள்ளனர்.
இந்நிலையில், கோவா சட்டசபையில் இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திகம்பர் காமத், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.
பசுவை கொன்று அதன் இறைச்சியை சாப்பிடும் மனிதனுக்கு தண்டனை வழங்கப்படும்போது, பசுவை சாப்பிடும் புலிகளுக்கு என்ன தண்டனை? என தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ சர்ச்சில் அலெமாவோ கேள்வி எழுப்பினார்.
பசுக்களை அடித்து சாப்பிடும் புலிகளுக்கும் தன்டனை வழங்கப்பட வேணடும். வனவிலங்குகளைப் பொருத்தவரை புலிகள் முக்கியம்தான். ஆனால் மனிதர்களைப் பொருத்தவரை, பசுக்கள் முக்கியம். எனவே, இந்த விஷயத்தில் மனிதர்களின் நலனை புறக்கணிக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் பிரமோத் சாவந்த், ‘தங்கள் கால்நடைகளை புலிகள் தாக்கியதால் அவற்றை பொதுமக்கள் கொன்றுள்ளனர். விலங்குகள் தாக்கியதால் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு மூன்று அல்லது நான்கு நாட்களில் நிவாரணம் வழங்கப்படும்’ என்றார்.