புலிகள் 
செய்திகள்

கேரளாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கேரளாவில் புலிகள் எண்ணிக்கை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக வயநாடு சரணாலயத்தில் மட்டும் 80 புலிகள் உள்ளன.

மாலை மலர்

கூடலூர்:

இந்தியாவின் தேசிய விலங்கான புலி இனம் அழியும் அபாயத்தை நோக்கி சென்றது. உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிக அளவு புலிகள் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு புலிகள் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புலிகளின் எண்ணிக்கையை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதன் பலனாக தற்போது புலிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சர்வதேச புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியது. கேரளாவில் கடந்த 2006-ம் ஆண்டில் 46 புலிகள், 2010-ம் ஆண்டில் 71 புலிகள், 2014-ம் ஆண்டு 136, 2016-ல் 176 புலிகள் என படிப்படியாக எண்ணிக்கை உயர்ந்து வந்தது. 2018-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்புபடி 190 புலிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக வயநாடு சரணாலயத்தில் மட்டும் 80 புலிகள் உள்ளன.

இது குறித்து தேக்கடி புலிகள் சரணாலய அதிகாரிகள் கூறுகையில், இந்த சரணாலயத்தில் 2018-ம் ஆண்டு கணக்கெடுப்புபடி 30 முதல் 35 புலிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. பெரியாறு சரணாலய பகுதி அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டது.

புலிகள் பெரும்பாலும் வனப்பகுதிகளை விட புல்வெளிகள் மற்றும் காய்ந்த தீவனங்கள் கிடைக்கும் சமவெளிகளில்தான் வசித்து வருகின்றன. இருந்தபோதும் பெரியாறு சரணாலயத்தில் புலிகள் எண்ணிக்கையை உயர்த்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.