சூலூர்:
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (23) தொழிலாளி. இவரது மகன் சுதன் (3).
மணிகண்டன் சம்பவத்தன்று தனது மனைவியுடன் சூலூர் நடுப்பாளையம் பகுதியில் உள்ள ராமதுரை என்பவருக்கு சொந்தமான இடத்தில் குழிதோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர்கள் தங்களுடன் மகன் சுதனையும் அழைத்து சென்றிருந்தனர். சுதன் அங்கு விளையாடி கொண்டிருந்தான். அப்போது அருகில் இருந்த மற்றொரு குழியில் மழைநீர் தேங்கி இருந்தது. இதை அறியாத சிறுவன் தவறி அந்த குழியில் விழுந்தான். இதில் அவன் தண்ணீரில் மூழ்கினான்.
இதை பார்த்து பதறிப்போன அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேங்கிய மழைநீரில் மூழ்கி 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.