செய்திகள்

செங்கம் அருகே மண் சரிந்து 3 தொழிலாளிகள் பலி

செங்கம் அருகே கிணறு தோண்டும்போது மண் சரிந்து விழுந்ததில் மூச்சு திணறி 3 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாலை மலர்

செங்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த தேவனந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஏழுமலை. இவர் தனது கிணற்றை தோண்ட முடிவு செய்தார். இந்த பணியில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளிகள் முனியப்பன் (வயது 27), சுதாகர் (25), சுரேஷ் (25) ஆகியோர் ஈடுபட்டனர். அவர்கள் 3 பேரும் நேற்று கிணற்றுக்குள் இறங்கி மண்ணை அள்ளும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக மேல் இருந்து மண் திடீரென சரிந்து அவர்கள் மேல் விழுந்து அமுக்கியது. இதில் அவர்கள் 3 பேரும் 10 அடி ஆழத்தில் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்க போராடினர். ஆனாலும் மண்ணை அகற்ற நேரமானதால் 3 பேரும் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து புதுப்பாளையம் போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.