செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி

மராட்டிய மாநிலத்தில் கனமழையால் சேதமான பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

மும்பை:

மராட்டிய மாநிலத்தில் கனமழையால் சேதமான பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டிய மாநிலம் நிம்போடி கிராமத்தை சேர்ந்த அகமது நகரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் அந்த பகுதியில் கனமழை பெய்ததால், பள்ளி வகுப்பறைகள் சேதமடைந்து விரிசல்கள் ஏற்பட்டிருந்தன.

இந்நிலையில், அந்த பள்ளி நேற்றும் வழக்கம்போல் செயல்பட்டது.  5-ம் வகுப்பில் 35-க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். ஆசிரியர் லீனா பாட்டீல் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் அங்கிருந்த ஷ்ரேயாஸ் ரஹானே, சுமேஷ் பிங்கார்திவ் மற்றும் வைஷ்ணவி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20-க்கு மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். லீனா பாட்டீலுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.

பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததை அறிந்த கிராமத்தினர், விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழை பெய்ததால் சேதமான பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.