மதுரை:
மதுரை செல்லூர் அருள் தாஸ்புரம் பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் திருநந்து (வயது15). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
பள்ளி கட்டணத்தை திருநந்துவின் தந்தை செலுத்த தாமதமானதாக தெரிகிறது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் திருநந்துக்கு நெருக்கடி கொடுத்தது.இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் விரக்தி அடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி கட்டணம் செலுத்த நெருக்கடி கொடுத்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை வில்லாபுரம் தென்றல் நகரைச் சேர்ந்தவர் அம்ஜன்கான் (25). போதை பழக்கத்துக்கு அடிமையான இவரை பெற்றோர் கண்டித்தனர். அம்ஜத்கானால் அதனை கைவிட முடியவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எல்லீஸ் நகர் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் மனோகரன் (65). இவரது மனைவி கடந்த 18-ந்தேதி இறந்துவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த மனோகரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.