இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் நேற்று முன்தினம் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 10.30 மணியளவில் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தது. இதனால் அங்கு குழுமியிருந்த 22 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டது 22 வயதான சல்மான் அபேதி என்பவர் என்றும், இவர் லிபியாவில் இருந்து சிறுவயதில் அகதியாக இங்கிலாந்து வந்தவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மான்செஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இன்று 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று வாரண்டுகளின் அடிப்படையில் தெற்கு மான்செஸ்டரில் 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மான்செஸ்டர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.