செய்திகள்

ஐக்கிய ஜனதா தளத்துக்கு 3 மத்திய மந்திரி பதவி

பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு மூன்று மத்திய மந்திரி பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை மலர்

புதுடெல்லி:

பீகார் மாநிலத்தில் லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்து நிதிஷ்குமார் ஆட்சி அமைத்தார். லாலு குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் நிதிஷ்குமார் அந்த கூட்டணியில் இருந்து விலகினார். பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து அவர் மீண்டும் ஆட்சி அமைத்தார்.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு நிதிஷ்குமாருக்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா அழைப்பு விடுத்தார். இருவர் இடையே நடந்த சந்திப்பின் போது இதை வலியுறுத்தினார்.

இதையேற்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருகிறது. இதுகுறித்து வருகிற 19-ந்தேதி முடிவு செய்கிறது.

மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையிலும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இடம் பெறுகிறது.

மத்திய மந்திரிகள் மீது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 3 இடங்கள் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிஷ்குமாரின் விசுவாசிகளான ஆர்.சி.பி.சிங், ராம்நாத் தாகூர், ஹரிவனிஷ் ஆகிய 3 பேருக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த மூவரும் டெல்லி மேல்-சபை எம்.பி.க்களாக உள்ளனர்.