செய்திகள்

கோவை அருகே தோட்டத்தில் 10 கிலோ மான்கறியுடன் 3 பேர் கைது

கோவை அருகே 10 கிலோ மான்கறியுடன் 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

மாலை மலர்

கவுண்டம்பாளையம்:

கோவை ஆனைக்கட்டி பகுதியில் தனியார் தோட்டத்தில் ஒரு கும்பல் மான்கறி சமைத்து சாப்பிடுவதாக பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலகத்துக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து வனச்சரகர் பழனிராஜா மற்றும் வனஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர். வனத்துறையினரை கண்டதும் அந்த கும்பல் ஓட்டம் பிடித் தது. இதில் 3 பேரை வனத்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

கைதான 3 பேரையும் வனசரக அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஆனைகட்டி அருகே உள்ள பெரியஜம்புகண்டியை சேர்ந்த ராஜசேகரன்(வயது 50), அர்ஜூனன்(65), சீங் குழியை சேர்ந்த மருதன்(65) என்பதும், தப்பி ஓடியது சீங்குழியை சேர்ந்த பெரிய தம்பி(60) என்பதும் தெரிய வந்தது.

நாய்கள் கடித்து இறந்து கிடந்த மானை எடுத்து கறி வைத்து சாப்பிட முயன்றதாக அவர்கள் கூறினர். இது குறித்து 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய பெரியதம்பியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.