செய்திகள்

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகரிப்பு

இன்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அருகம்புல் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளது. #vinayagarsathurthi

ஆரல்வாய்மொழி:

தோவாளையில் பூமார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு குமரி, நெல்லை மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு, சேலம், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்தும் பலவிதமான பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று தோவாளை மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட அதிக அளவு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. உள்ளூர் வியாபாரிகள் பலர் பூக்களை வாங்கி சென்றனர். பிச்சி, மல்லி போன்ற பூக்கள் விலையில் மாற்றம் இல்லை. நேற்றும் இன்றும் இந்த பூக்கள் ஒரே விலையில் விற்பனையானது. பிச்சி கிலோ ரூ. 500க்கும், மல்லி கிலோ ரூ.600க்கும் விற்பனையானது. மஞ்சள் கேந்தி ரூ.50, சிவப்பு கேந்தி ரூ.60, வெள்ளை செவ்வந்தி ரூ.200, வாடாமல்லி ரூ.25, ரோஜாப்பூ ரூ.150க்கு விற்பனையானது.

வழக்கமாக அருகம்புல் ஒரு கட்டு ரூ.10க்கு விற்பனையாகும். இன்று விநாயகர் சதுர்த்தியை யொட்டி விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து பூஜை செய்யப்படும் என்பதால் அருகம்புல் தேவை அதிகமாக இருந்தது. இதனால் அருகம்புல் கட்டு 3 மடங்கு விலை உயர்ந்து ரூ.30க்கு விற்பனையானது. பிள்ளையார் சிலைக்கு மாலையாக போடப்படும் எருக்கம்பூ கிலோ ரூ.100க்கு விற்கப்பட்டது. பூஜையில் பயன்படுத்தப்படும். தேட்டிப்பூ கிலோ ரூ.200 ஆக இருந்தது. #vinayagarsathurthi

SCROLL FOR NEXT