செய்திகள்

பாகிஸ்தான்: பதவியிழந்த பின் நவாஸ் ஷெரீப் பங்கேற்ற 380 கி.மீ தூர பேரணி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நடத்திய 380 கிலோ மீட்டர் தூர பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று அவருக்கு ஆதரவளித்தனர்.

மாலை மலர்

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு மற்றும் பணப் பதுக்கல் செய்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மீது
பணாமா லீக்ஸ் எனும் விவகாரத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மீதான வழக்கின் தீர்ப்பில் அவரை பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனையடுத்து, அந்நாட்டின் இடைக்கால பிரதமராக கடந்த வாரம் அப்பாஸி பதவியேற்றார். இந்நிலையில், பதவி பறிபோன பின்னர் முதன் முதலாக நவாஸ் ஷெரீப் பங்கேற்கும் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இஸ்லாமாபாத் நகரிலிருந்து தொடங்கும் இந்த பேரணி 380 கிலோ மீட்டர்கள் கடந்து லாகூரில் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று நடந்த பிரம்மாண்ட பேரணியில் நவாஸ் ஷெரீப் பங்கேற்றார். அப்போது, வழி நெடுகிலும் பல்வேறு இடங்களில் கட்சித்தொண்டர்கள் அவரது கார் மீது பூக்களை தூவி வரவேற்றனர். நவாஸ் ஷெரீப்பின் பேரணி செல்லும் பாதையில் நேற்று முன் தினம் வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் 38 பேர் காயமடைந்தனர்.