தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தலை சேர்ந்தவர் மாடசாமி (வயது 79). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
மாடசாமி கடந்த 1960 முதல் 1975-ம் ஆண்டு வரை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் ஓய்வுக்கு பிறகு தனது சொந்த ஊரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு வள்ளியம்மாள் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் மாடசாமி மிகவும் சோகத்தில் ஆழ்ந்தார். தொடர்ந்து தனது மனைவிக்கு சிலை அமைத்து வணங்க முடிவு செய்தார். அதன்படி வீட்டின் முன்பு கடந்த 2017-ம் ஆண்டு தனது மனைவிக்கு ரூ.8 லட்சம் செலவில் கற்சிலை அமைத்தார். அதன் அருகில் தனது சிலையையும் நிறுவினார். அவர் தனது மனைவியின் சிலைக்கு தினமும் பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார்.
இதுகுறித்து மாடசாமி கூறும்போது, ‘நான் தினமும் காலையில் எழுந்ததும் எனது மனைவியின் சிலைக்கு பூஜைகள் செய்து வணங்கிய பிறகுதான் எந்தவொரு முக்கிய வேலையையும் தொடங்குவேன். அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால், அதிலும் எனக்கு மனைவியாக வள்ளியம்மாள் வர வேண்டும் என்று நினைத்து கடவுளை வணங்கி வருகிறேன்’ என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.