செய்திகள்

தொண்டி அருகே கோஷ்டி மோதல் - 21 பேர் கைது

தொண்டி அருகே கோஷ்டி மோதலில் 21 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

தொண்டி:

திருவாடானை தாலுகா, தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கிராமத்தில் இரு கோஷ்டிகளாக இருந்து வந்த நிலையில் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்றது.

முள்ளிமுனையில் ஊர்த் தலைவரை தேர்ந்தெடுப்பதில் கடந்த 4 நாட்களாக இழுபறி நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் கூட்டுறவு சங்க தேர்தலில் தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் முரண்பாடு உருவானது. முள்ளிமுனை கருப்பண சாமி கோவில் அருகே இரு கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.

பழனி கண்ணன் (வயது 27) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜா (49), சினி சாகிபு (38), தூண்டி முத்து (25), கதிரவன் (28), கருப்பணசாமி (54), காளிமுத்து (35), சமய கண்ணன் (45), ராஜா (45), மணிமுத்து (55), சின்னமுத்து (26), ரகுமான் (18). ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதே போல் சின்னமுத்து (50) கொடுத்த புகாரின் பேரில் பால் கண்ணன் (27), செல்வம் (50), வேலுச்சாமி (52), முத்துச்செல்வம் (39), சமய செல்வம் (39) பாண்டி (28), சமயன் (52), மனோகரன் (47), சமயதேவா (20) ஆகியோர் மீது தொண்டி போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இவர்கள் திருவாடானை நீதிபதி பாலமுருகன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அனைவரையும் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காயம் பட்டவர்கள் திருவாடானை, ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் .

இது குறித்து திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் தொண்டி பொறுப்பு மாரீஸ்வரி,தொண்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.