கார் உருக்குலைந்து கிடப்பதையும், பலியானவர்கள் உடல்களையும் படத்தில் காணலாம். 
செய்திகள்

தொண்டி அருகே விபத்து- 3 வாலிபர்கள் பலி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த அப்துல்கலாம் ஆசாத் (வயது23), செய்யது இபுராகிம் (30), முகமது ரிபிக் (23), முகமது சுப்ரீத் (24), அஸ்பாக் (26) மற்றும் மணக்குடி கருப்பையா (29) ஆகியோர் காரில் ராமநாதபுரம் சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் கிழக்கு கடற்கரை சாலையில் கார் வந்தபோது எதிரே சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் அரசு பஸ் வந்தது. எதிர்பாராதவிதமாக இந்த பஸ், கார் மீது மோதியது.

இந்த விபத்தில் கார் நொறுங்கியது. அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

விபத்தில் காரில் வந்தவர்களில் அப்துல் கலாம் ஆசாத், செய்யது இபுராகிம், கருப்பையா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்தில் பலத்த காயம் அடைந்த மற்ற 3 பேரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT