சென்னை:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தோக்கவாடி, ஆனங்கூரில் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் சார்பில் 110.22 கி.வோ துணைமின் நிலையம் அமைக்கும் பணியின் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு எம்.பி. செல்வக்குமார சின்னையன் முன்னிலை வகித்தார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு தோக்கவாடி, ஆனங்கூரில் ரூ.7.17 கோடி மதிப்பீட்டில் துணை மின்நிலையம் அமைக்கும் பணியினை பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.
இத்துணைமின் நிலையத்தின் மூலம் பள்ளி பாளையம் துணை மின் நிலையத்திலிருந்து 3ல் 1 பகுதி மின்சாரமும், சங்ககிரி துணைமின் நிலையத்திலிருந்து 1 பகுதி மின்சாரமும் சேமித்து இப்பகுதிக்கு அருகாமையில் உள்ள குட்டச்சிபாளையம், காடச்சநல்லூர், அண்ணாநகர், தோக்கவாடி மற்றும் இப்பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு தடையின்றி மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படும்.
மேலும் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக விரைவு மின்வசதி வழங்கவும் ஏதுவாக அமையும் என குறிப்பிட்டார்.
இவ்விழாவில் தமிழ் நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழக மின்தொடரமைப்பு கழகத்தின் தலைமைப் பொறியாளர் சந்திரசேகர், அரசு துறை அலுவலர்கள், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.