குடவாசலில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம். 
செய்திகள்

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அலுவலக உள்ளிருப்பு போராட்டம்

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலக உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.

மாலை மலர்

திருத்துறைப்பூண்டி:

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொள்ளாமல் ஊரக வளர்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க நிர்ப்பந்தம் செய்வதை அரசு கைவிட வேண்டும். கோவை மாவட்டத்தில் 4 ஊழியர்களின் மாவட்ட பணி மாறுதலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளை ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

கணினி உதவியாளர்கள் மற்றும் முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட பகுதிகளில் அலுவலக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க கிளை தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்ச்செல்வம், வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குடவாசல் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த போராட்டத்துக்கு குரு அண்ணாதுரை தலைமை தாங்கினார். நெடுஞ்சேரலாதன் வரவேற்று பேசினார். உள்ளிருப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வலங்கைமான் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க வட்ட தலைவர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.