செய்திகள்

இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி மாரிமுத்து தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. #ThiruvarurByElection #SupremeCourt

மாலை மலர்

திருவாரூர் தொகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு(நேற்று) ஆஜராகி, கஜா புயல் நிவாரண பணிகள் திருவாரூரில் இன்னும் நிறைவு அடையவில்லை என்றும், அந்த தொகுதியில் புயலின் பாதிப்பால் பலரும் தங்கள் உடைமைகளையும் ஆவணங்களையும் இழந்து இருப்பதால் பலர் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த முடியாமல் போகும் என்றும், எனவே, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் முறையீடு செய்தார்.

அதற்கு நீதிபதிகள், இது குறித்து மனு தாக்கல் செய்யுமாறும், அதன்பிறகு அதன் அவசர தன்மை குறித்து முடிவெடுப்பதாகவும், தற்போது உடனடியாக அவசர வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி மாரிமுத்து தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.