செய்திகள்

திருவான்மியூர் அருகே போலி ஆதார் கார்டு தயாரித்த நேபாள வாலிபர் உள்பட 3 பேர் கைது

திருவான்மியூர் அருகே போலி ஆதார் கார்டு தயாரித்த நேபாள வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவான்மியூர்:

பெசன்ட்நகர் கடற்கரையில் நேற்று திருவான்மியூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் நிலையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்களது பெயர் அருண் (25), பாலமுருகன் (28) என தெரியவந்தது. இவர்கள் திருவான்மியூரை சேர்ந்தவர்கள் மற்றொருவர் நேபாளத்தை சேர்ந்த நிம்பகதூர் கட்ரி (24). இவர் வேப்பேரியில் ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறார்.

அருண், பாலமுருகன் இருவரும் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். அக்கம்பெனி மூலம் திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஆதார் கார்டு தயாரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேபாளத்தை சேர்ந்த நிம்பகதூர் கட்ரி மூலம் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு போலி ஆதார் கார்டு தயாரித்து கொடுத்து பணம் சம்பாதித்து வந்தனர்.

கடந்த ஒருவருடமாக இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அருண், பால முருகன், நிம்பகதூர் கட்ரி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.