மரணத்திற்கு முன்பே தம்பதி கட்டிய கல்லறை 
செய்திகள்

மரணத்துக்கு முன்பே கல்லறை கட்டிய தம்பதியரின் ஆசை நிறைவேறியது

திருவனந்தபுரத்தில் மரணத்துக்கு முன்பே கட்டி வைத்த கல்லறையில் தம்பதியினரின் உடல் அடக்கம் செய்யப்பட்டதன் மூலம் அவர்களின் ஆசை நிறைவேறியது.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆரியநாடு பகுதியை சேர்ந்தவர் ஹமாலியன். இவரது மனைவி மேரிகுட்டி அம்மா (வயது 83).

இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வாழ்க்கை நடத்தி வந்த ஹமாலியனுக்கு தனக்கும், தனது மனைவிக்கும் மரணத்திற்கு முன்பே தானே கல்லறை கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அதன்படி தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் 2 கல்லறைகளை கட்டி தயாராக வைத்துக்கொண்டார். தானும், தனது மனைவியும் மரணமடைந்த பிறகு அந்த கல்லறையில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று பிள்ளைகளிடமும் கூறிவிட்டார்.

இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக கடந்த 2008-ம் ஆண்டு ஹமாலியன் மரணமடைந்தார். அவரது விருப்பப்படி வீட்டு தோட்டத்தில் உள்ள கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த கல்லறைக்கு தினமும் மலர் மாலைகள் அணிவித்து அவரது மனைவி காலத்தை ஓட்டிவந்தார்.

இதற்கிடையில் மேரி குட்டி அம்மாவும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். அவரது உடலும் கணவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே ஏற்கனவே அவர்கள் கட்டி வைத்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.