கொரோனா வைரஸ் 
செய்திகள்

திருப்பத்தூரில் ஆட்டோ மூலம் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மாவட்டத்தில் முதல்முறையாக ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாலை மலர்

திருப்பத்தூர்:

கோரோனா விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கையாக ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊராட்சிகள் உதவி இயக்குனர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கந்திலி ஊராட்சி ஒன்றியம் சார்பில் பள்ளிபட்டு ஊராட்சியில் திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மாவட்டத்தில் முதல்முறையாக ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தினமும் 15 முறை கை கழுவ வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். யாருக்காவது காய்ச்சல் சளி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்.

இளநீர் ஆர்.எஸ்.கஞ்சி போன்ற நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை பருகவேண்டும் சமீபத்தில் வெளிநாடு பயணம் சென்றவர்கள் இருமல் சளி காய்ச்சல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தெரிவிக்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதிவு செய்யப்பட்ட ஒலிநாடா கொண்டு ஆட்டோ விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிகள் தணிக்கை சுதா தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன் மேலாளர் கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளிப்பட்டு ஊராட்சி முழுவதும் திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

பின்னர் கை கழுவும் முறை குறித்து செய்முறை விளக்கம் பொதுமக்களுக்கு  அளிக்கப்பட்டது. விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

இறுதியில் ஊராட்சி செயலர் கோபிநாதன நன்றி கூறினார்.