தற்கொலை 
செய்திகள்

நெல்லை சந்திப்பில் பெட்டிக்கடைகாரர் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை சந்திப்பில் பெட்டிக்கடைகாரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை திருமால் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 50). மாற்றுத்திறனாளியான இவர் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு சங்கரி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இதில் முதல் மகள் ஜோதி கோகிலா 11-ம் வகுப்பும், இரண்டாவது மகள் தர்சினி 7-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சந்திப்பு பஸ் நிலையம் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால் அதனை சுற்றியுள்ள கடைகளை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ராமச்சந்திரன் வைத்திருந்த பெட்டிக்கடையும் அதற்கு இடையூறாக இருந்ததால் மாநகராட்சி இன்று காலை அதனை அகற்ற முற்பட்டது.

இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன் கடைக்குள்ளேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.