நெல்லை:
திருச்செந்தூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது40). இவர் திருச்செந்தூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக டெப்போவில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் திருச்செந்தூரில் இருந்து நெல்லை வந்த அரசு பஸ்சில் கண்டக்டராக வந்தார்.
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு டீ குடிப்பதற்காக டிரைவரும், அவரும் கீழே இறங்கினார்கள். அப்போது டிரைவர் சீட் அருகே உள்ள பகுதியில் கண்டக்டர் டிக்கெட் புக் மற்றும் தனது ஐ.டி. கார்டு, ஏ.டி.எம். கார்டு அடங்கிய பையை வைத்துள்ளார். டீ குடித்து விட்டு வந்த போது அந்த பையை காணவில்லை.
அதில் இருந்த டிக்கெட் புக் உள்பட அனைத்து கார்டுகளும் மாயமானது. இது குறித்து கண்டக்டர் ராமச்சந்திரன் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
பாளை பெருமாள்புரம் நியூ காலனியை சேர்ந்தவர் ஜெகநாதன் (60). இவர் தனது மொபட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு டீக் கடை முன்பு நிறுத்தி விட்டு டீ குடித்துள்ளார். சிறிது நேரம் கழித்து மொபட்டை பார்த்த போது அதை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து ஜெகநாதன் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட் திருடர்களை தேடி வருகிறார்கள்.