செய்திகள்

கொடநாடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: திருநாவுக்கரசர்

கொடநாடு பங்களாவில் உண்மையில் நடந்தது என்ன என்பது பற்றி கண்டறிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

மாலை மலர்

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொடநாடு பங்களாவில் நடந்துள்ள கொலை மற்றும் தொடர்ந்து நடைபெற்று வரும் சம்பவங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. எனவே கொடநாடு பங்களாவில் கொள்ளை முயற்சி நடந்ததா? உண்மையில் நடந்தது என்ன என்பது பற்றி கண்டறிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு மற்றும் சிறுதாவூர், போயஸ் கார்டன் இல்லங்களை அரசுடமை ஆக்க வேண்டும்.

தமிழக அரசியலில் பா.ஜனதா திருவிளையாடல் நடத்துகிறது. அந்த கட்சியின் சதி திட்டத்தால் அ.தி.மு.க. உடைந்து அமைச்சர்கள் பல குழுக்களாக பிரிந்து நிற்கிறார்கள்.

தேர்தலில் மூலம் ஆட்சிக்கு வரமுடியாத பா.ஜனதா கொல்லைபுறம் வழியாக நுழைய முயற்சி செய்கிறது. ஆனால் ஒரு போதும் அவர்கள் முயற்சி பலிக்க போவது இல்லை.

கடுமையான வறட்சி காரணமாக காவிரி டெல்டா பகுதி பாலைவனமாகி விட்டது. மாநிலம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மத்திய அரசிடம் தேவையான நிதி பெற்று போர்க்கால அடிப்படையில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டும்.

தமிழக காங்கிரசுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி சொத்துக்களை மீட்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அமைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.