தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று நெல்லை வருவதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்றைக்கு மருத்துவமனையில் படுத்தாரோ? அன்றிலிருந்து தமிழக அரசும் படுத்தபடுக்கையாக உள்ளது. சென்னையில் வெள்ளம் பாதித்தபோது 88 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசு கேட்டது. ஆனால் மத்திய அரசு வழங்கவில்லை. நீட் தேர்வால் தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் நீட் தேர்விலிருந்து ஒரு ஆண்டு மட்டும் மத்திய அரசு விலக்கு அளித்தது. ஆனால் தற்போதைய அரசு சட்டமன்றத்தில் 2 முறை தீர்மானம் கொண்டு வந்தும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இன்று விவசாயிகளின் பிரச்சனைகளை ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப்போக்கே காரணம். ஒரு கோடி இளைஞர்கள் இன்று வேலையில்லாமல் உள்ளனர்.
தற்போது அ.தி.மு.க. 3, 4-ஆக பிரிந்து உள்ளதற்கு பா.ஜ.க. தான் காரணம். பா.ஜ.க. தமிழகத்தில் கால் ஊன்ற முடியாததால் அவர்கள் முன்னாள் முதல்வரையும், இன்னாள் முதல்வரையும் சேர கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். தமிழகத்தில் சுகாதாரத்துறை செயல் இழந்து உள்ளது.