சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பெருந்தலைவர் ஆட்சி என்பது எளிமையான, நேர்மையான, தூய்மையான, ஊழலற்ற, மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற ஆட்சி முறையாகும். இத்தகைய ஆட்சி முறையை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவர வேண்டுமென காங்கிரஸ் விரும்புகிறது.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, மக்கள் நலனில் அக்கறை இல்லாத, ஊழல் செய்வதை நோக்கமாக கொண்ட ஆட்சி என்பதை எவரும் மறுக்க முடியாது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற முடியாது என்கிற நிலையில் ஆட்சி எவ்வளவு காலத்திற்கு நீடிக்கிறதோ, அதற்குள்ளாக தமிழகத்தை வளர்க்காமல், தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமென அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
மக்கள் நலனுக்கு விரோதமான அ.தி.மு.க. அரசு அகற்றப்பட்டு காமராஜர் ஆட்சி முறையைப் போல செயல்படுகிற ஒரு ஆட்சி தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டுமென்பதே பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் அனைவரும் எடுக்க வேண்டிய சூளுரையாகும்.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா அவர் பிறந்த ஊரான விருதுநகரில் ஜூலை 15 ஆம் தேதி மாலை கோலாகலமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தென்மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் விருதுநகரில் நடைபெறும் விழாவில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.