சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்தித்தார்.
அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ராணி, முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, எஸ்.டி. பிரிவு தலைவர் செல்வ பெருந்தகை, மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி ஆகியோரும் சென்றனர்.
இந்த சந்திப்பு முடிந்ததும் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலைகளை கவர்னரிடம் சுட்டிக்காட்டினோம். உடனடியாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினோம்.
தலித் மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள தீர்ப்பு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அந்த தீர்ப்பின் மீது மத்திய அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யவும் வலியுறுத்தினோம்.
வருகிற 2-ந்தேதி தலித் மக்களை பாதிக்கும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
கூட்டுறவு சங்க தேர்தலில் நடைபெறும் முறைகேடுகளை சுட்டிக்காட்டி நியாயமாக தேர்தல் நடைபெற நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினோம். வருகிற 1-ந்தேதி அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews