கொலை 
செய்திகள்

எங்களை தீர்த்துக்கட்டுவதாக மிரட்டியதால் வாலிபரை கொன்றோம் - கைதான 7 பேர் வாக்குமூலம்

திருமுல்லைவாயல் ரெயில் நிலையம் அருகே எங்களை தீர்த்துக்கட்டுவதாக மிரட்டியதால் வாலிபரை கொன்றோம் கைதான 7 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மாலை மலர்

ஆவடி:

திருமுல்லைவாயல் பெரியார் நகர் நேதாஜி குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 32). நேற்று முன்தினம் காலை அவர் தனது மகனை பள்ளி வேனில் ஏற்றி விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

திருமுல்லைவாயல் ரெயில் நிலையம் அருகே ஜெயலட்சுமி நகர் முதல் மெயின் ரோட்டில் வந்த போது மர்ம கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ்குமார் பலியானார்.

கொலை தொடர்பாக திருமுல்லைவாயல் பெரியார் நகர் மற்றும் அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாம்பு தினேஷ், வின்சென்ட், வெங்கடேஷ்குமார், சரண், பிராங்கிளின், ஜீவன்பிரபு, கணேஷ் ஆகிய 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:-

சந்தோஷ் குமாருக்கும், பாம்பு தினேஷ், சரண் மற்றும் கோபால் ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை உள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு சந்தோஷ்குமாருக்கும் சரணுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது சந்தோஷ்குமார் எங்களை தீர்த்துக்கட்டி விடுவதாக கூறி மிரட்டினார்.

இதனால் நாங்கள் முன் கூட்டியே சந்தோஷ் குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். அதன்படி நண்பர்களுடன் சேர்ந்து அவரை வெட்டிக் கொன்றுவிட்டோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைதான 7 பேரும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவான கோபாலை போலீசார் தேடி வருகிறார்கள்.