திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த திருமழிசை இளங்காளி அம்மன் நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 45). இவருக்கு சொந்தமான அருகில் உள்ள வீட்டில் அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் தேவராஜ் வாடகைக்கு வசித்தார்.
கடந்த 4 மாதமாக தேவராஜ் வீட்டுக்கு வாடகை கொடுக்கவில்லை. மின்சார கட்டணமும் செலுத்தவில்லை. இதுபற்றி வடிவேல் அடிக்கடி அவரிடம் கேட்டு வந்தார்.
ஆனால் தேவராஜ் வாடகை பணம் கொடுக்காமல் தொடர்ந்து இழுத்தடித்தார். இதனால் கோபம் அடைந்த வடிவேல், தேவராஜ் வீட்டில் மின்சாரத்தை துண்டித்தார்.
வேலைக்கு சென்றுவிட்டு தேவராஜ் திரும்பி வந்த போது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி கேட்பதற்காக அவர், வீட்டு உரிமையாளர் வடிவேல் வீட்டுக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த தேவராஜ் அருகில் கடந்த கடப்பாரையால் வடிவேலை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வடிவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வெள்ளவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.