செய்திகள்

பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவளவன்

ஆர்.கே.நகரில் எழுந்துள்ள பணப்புகார் தொடர்பாக தேர்தலை நிறுத்தக்கூடாது. பணம் கொடுக்கும் கட்சிகளின் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.

மாலை மலர்

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள நடுசூரங்குடியைச் சேர்ந்த திலகராஜ் (வயது 28), ஞானசேகர் (33) ஆகியோர் மர்மமான முறையில் சமீபத்தில் இறந்தனர்.

தோட்டத்து மின் வேலியில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் தாக்கியதில் அவர்கள் இறந்ததாக கூறப்பட்டு, தோட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

பலியான 2 பேரின் குடும்பத்தினரையும், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் சந்தித்து ஆறுதல் கூறினார். தலா ரூ. 25 ஆயிரம் நிதியும் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

மின்வேலி மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்ததாக கூறப்படுவது சந்தேகம் அளிக்கிறது. இது குறித்து சி.பி.சி. ஐ.டி. விசாரணை நடத்தப்பட வேண்டும். பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சத்தை அரசு வழங்க வேண்டும்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் அதிக அளவு பணப்பட்டுவாடா நடப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதனை வைத்து தேர்தலை ரத்து செய்யக்கூடாது. பணப்பட்டுவாடா செய்யும் கட்சிகளின் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் வழங்கப்பட வேண்டும். தமிழக கவர்னர், மாவட்டங்களில் ஆய்வுப்பணி நடத்துவது சரியானதல்ல.

இது முதல்வர் அதிகாரத்தில் தலையிடுவது போல் உள்ளது. அதனை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.