செய்திகள்

கமலின் கருத்தை ஆதரிக்கிறேன்: இந்து தீவிரவாதம் குறித்து விவாதம் நடத்த வேண்டும்- திருமாவளவன்

இந்து தீவிரவாதம் என்ற சொல்லுக்கு கமல்ஹாசனை விமர்சிக்க வேண்டியதில்லை. இதுகுறித்து வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டும். கமலின் கருத்தை ஆதரிப்பதாகவும் திருமாவளவன் கூறினார்.

மாலை மலர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புயல் இல்லை, ஏரிகள் திறக்கப்படவில்லை. ஆனாலும் சென்னையில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் தவிக்கின்றனர். குடிசை மக்கள் இடம் பெயர்ந்து உள்ளனர்.

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் இறந்துள்ளனர். இதற்கு தமிழக அரசே பொறுப்பு. குழந்தைகள் இறந்த குடும்பத்தினருக்கு அரசு அளித்துள்ள இழப்பீடு போதுமானதாக இல்லை. குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்.

போதிய முன் நடவடிக்கை எடுத்து உள்ளதாக சொன்னாலும் தற்போது பாதிப்பு அதிகமாக உள்ளது. மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இலங்கை மலையக மக்களின் பாதுகாவலராக இருந்த சவுமியமூர்த்தி, தொண்டைமானின் பெயர்களை, அடையாளங்களை இலங்கை அரசு அழித்து வருவது கண்டிக்கத்தக்கது.

வரலாற்றை அழிக்க முயற்சி செய்ததால்தான் விடுதலைப்புலிகள் தோன்றினார்கள். இந்த பிரச்சனையில் இந்திய அரசு தலையிட வேண்டும்.


மோடி அரசின் நவம்பர் 8-ந் தேதி கருப்பு பண ஒழிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசிய பொருளாதார பேரிடர் நாளாக நாடு முழுவதும் கடைபிடிப்பதோடு அன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். சென்னையில் எனது தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் வீரமணி, முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, பண்ணியான் பகுதியில் நடந்த மோதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கணக்கு குறைத்து காட்டப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் முழுமையாக கைது செய்யப்படவில்லை.

இந்து தீவிரவாதம் என்ற சொல்லுக்கு கமல்ஹாசனை விமர்சிக்க வேண்டியதில்லை. இதுகுறித்து வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டும். கமலின் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.