விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற் குழு கூட்டம் திருவள்ளூரில் மாவட்டச் செயலாளர் சித்தார்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டிசம்பர் 10-ந்தேதி திருச்சியில் சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறவுள்ளது.
சனாதன என்பது நவீன காலத்துக்கு பொருந்தாத இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ்.சின் கோட்பாடு. அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியல் சாசனத்துக்கு உட்பட்ட ஜனநாயகத்தை காப்போம் என்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். இந்த மாநாட்டில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்.
இந்தியாவில் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு உலகிலேயே உயரமான சிலை இல்லை. பட்டேல் உள்துறை அமைச்சராக இருந்து சுற்றியுள்ள சாம்ராஜ்ஜியங்களை இணைத்து முழு இந்தியாவை உருவாக்கினார். அதனால் அவருக்கு சிலை அமைப்பதில் எவ்வித தவறும் இல்லை.
அதே நேரத்தில் மகாத்மா காந்திக்கு சிலை அமைக்காமல் பட்டேலுக்கு உயரமான சிலை அமைப்பது ஏற்புடையதல்ல. பட்டேலுக்கு அமைத்த சிலை உலகிலேயே மிக உயர்ந்த சிலை என்ற நிலையை உருவாக்கியதன் மூலம் காந்தியடிகளுக்கு மாற்றாக பட்டேலை பாஜக தூக்கி நிறுத்தியுள்ளது ஏற்புடையதல்ல.
நடிகர் ரஜினிகாந்திடம் பா.ஜ.க. ஆபத்தான கட்சியா? என்ற கேள்விக்கு, அவர் ஆமாம், இல்லை என்ற பதில் கூறியிருக்க வேண்டும். அதைவிடுத்து 10 கட்சிகளை தனியாக எதிர்த்து நிற்கும் கட்சி என்பதால் பலமான கட்சி என ஒரு சம்மந்தமில்லாத பதிலை கூறியுள்ளார்.
பாம்பு விஷத்தன்மைக் கொண்டது. அதை 10 பேர் சூழ்ந்துக் கொண்டு அடித்தால் பாம்பு பலமானது என கூற முடியுமா? எனவே பா.ஜ.க. ஆபத்தான கட்சிதான்.அதற்கான பதிலை ரஜினி காந்த் நேரடியாக கூற வேண்டும்.
திருச்சி மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் சீதாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, சந்திரபாபுநாயுடு உள்ளிட்ட பல மாநில தலைவர்களை அழைத்துள்ளோம். அவர்களும் பங்கேற்பார்கள் என்று நம்புகிறோம்.