மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாரதிய ஜனதா அரசின் பொருளாதார கொள்கைகளை விமர்சித்ததாலும் அதன் தவறுகளை அம்பலப்படுத்தியதாலும் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இது திட்டமிடப்பட்டு உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும்.
பா.ஜனதா அரசு எதிர்க்கட்சிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். குற்றம் யார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் பழி வாங்க கூடாது.
காஞ்சீபுரத்தில் சர்க்சைக்குள்ளான தொண்டு இல்லம் மீது ஈவு இரக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வெள்ளம்புதூர் கிராமத்தில் விதவைப்பெண், அவரது மகன்-மகள்களை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் அவரது மகன் இறந்துவிட்டார். இந்த சம்பவம் சாதிப் பிரச்சனையால் நடந்ததா? அல்லது வேறு பிரச்சனையா? என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் தலித்துக்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் தற்கொலை சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு சிறப்பு ஆணையம் அமைக்க வேண்டும். மேலும் வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.