செய்திகள்

தூத்துக்குடியில் அமைதி பேரணிக்கு அனுமதி கேட்டு டி.ஜி.பி.யிடம் திருமாவளவன் மனு

தூத்துக்குடியில் 18-ந்தேதி அமைதி பேரணி நடத்த அனுமதி கேட்டு டி.ஜி.பி.யிடம் திருமாவளவன், தெகலான் பாகவி ஆகியோர் மனு கொடுத்தனர். #ThoothukudiShooting #Thirumavalavan

அடையாறு:

சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தெகலான் பாகவி உள்ளிட்டோர் டி.ஜி.பி.யை நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், அடக்குமுறைக்கான ஜனநாயகசக்தி என்ற பெயரில் வருகிற 18-ந்தேதி தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் தூத்துக்குடியில் அமைதி பேரணி மற்றும் இரங்கல் பொதுக்கூட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கும் 6 பேரை விடுதலை செய்ய வேண்டும், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வேல்முருகனை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தூத்துக்குடி போராட்டத்திற்கு பிறகு பல்வேறு வழக்கு பதிவுகளும் கைது சம்பவங்களும் தொடர்ந்து நடந்துவருகிறது, இதுபோன்ற ஒடுக்குமுறைகளை கைவிட்டு, ஜனநாயகரீதியாக போராடுபவர்களை தண்டிக்கக்கூடாது. அவர்களுக்கான ஜனநாயக உரிமையை வழங்க வேண்டும். சிறையில் வேல்முருகனுக்கு போலீசாரால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வருகிற 18-ந்தேதி தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் தூத்துக்குடியில் அமைதி பேரணி மற்றும் இரங்கல் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். #ThoothukudiShooting #Thirumavalavan

SCROLL FOR NEXT