செய்திகள்

திருமங்கலத்தில் அரசு பஸ்சில் பெண் டாக்டரிடம் நகை-பணம் கொள்ளை

திருமங்கலத்தில் அரசு பஸ்சில் பெண் டாக்டரிடம் நகை- பணத்தை கொள்ளையடித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

பேரையூர்:

மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி ராமலட்சுமி (வயது 68). டாக்டரான இவர், அலங்காநல்லூரில் கிளீனிக் நடத்தி வருகிறார். வேலை நிமித்தமாக ராமலட்சுமி நேற்று திருநெல்வேலிக்கு சென்று விட்டு அரசு பஸ்சில் ஊருக்கு புறப்பட்டார்.

திருமங்கலம் வந்தபோது ராமலட்சுமி வைத்திருந்த கைப்பை மாயமாகி இருந்தது. அதில் 11 பவுன் நகையும், ரூ.16 ஆயிரம் ரொக்கமும் இருந்தது. அதிர்ச்சியடைந்த ராமலட்சுமி பஸ் முழுவதும் தேடிப்பார்த்தும் கைப்பை கிடைக்கவில்லை.

இது குறித்து ராமலட்சுமி திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்தார். அதில், பஸ்சில் பயணம் செய்தபோது எனது அருகில் அமர்ந்திருந்த பெண் நகை, பணத்தை திருடியிருக்கலாம் என சந்தேகம் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் போலீசார் நகை திருடிய பெண்ணை தேடி வருகின்றனர்.