குண்டுகளை வீசும் போர் விமானம் (கோப்பு படம்) 
செய்திகள்

ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 32 பேர் பலி

ஏமன் நாட்டின் அல் ஜஃப் மாகாணத்தில் சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 32 பேர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

சனா:

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல்  சண்டை நடந்து வருகிறது.

இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. 

இந்த உள்நாட்டு போர் காரணமாக ஏமனில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் அல்ஜஃப் மாகாணத்தில் மக்கள் கூடியிருந்த பகுதியை குறிவைத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் பொதுமக்கள் 32 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட போர் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டுவீழ்த்திவிட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.